vendredi 17 février 2012

பெருந் துறவு. 5


                                                         சந்தகன் துயரம்

                    காலை இளம் பரிதி கீழ்த்திசையில் பல கோடி கதிர்களைப் பரப்பி கொண்டு இருந்த நேரம், கண்டகம் இரவு எங்கு நில்லாது இருபது மைல் தூரம் ஒரே பாச்சலாக அநோம நதிகரையை அடைந்தது. தாம் அடைய வேண்டிய கானகம் அதுவே என சித்தார்த்தர் கருதினார். குதிரையை விட்டு சந்தகனும் அவரும் கீழே இறங்கினர். உன்னால் எல்லாம் இனிதாகவே முடிந்தது என்று குதிரையை தட்டி கொடுத்து வாழ்த்தினார் சித்தார்த்தர் .


                          சந்தகனை் ஒப்பற்ற உதவியைச் செய்துவிட்டான். இதற்காக அவனைச் சித்தார்த்தர் பாராட்டினார். "உற்ற உறவினர் கூட ஒருவனுடைய அதிர்ஷ்டம் குறையும் போது வேற்றாராகி விலகிவிடுவார். நீயோ, பயன் கருதாமல், கடைசி வரை எனக்குப் பணிவிடை செய்து வந்திருக்கிறாய். உனக்கு நான் என்ன கைமாறு அளிக்க முடியும்..!" என்று கூறினார்.                 

                             இனி அவனை ஊருக்கு அனுப்பி விட வேண்டும் என்று கருதி "அன்பா நீ என்னிடம் பேரன்பு கொண்டு உதவி புரிந்தாய்! இந்த உதவி உனக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்மை விளைவிக்கும். இனியும் நீ ஓர் உதவி செய்ய வேண்டும். நான் அடைய வேண்டிய வணத்தை அடைந்து விட்டேன். இனி நீ குதிரையை அழைத்துக்கொண்டு நகருக்குத் திரும்பிவிட வேண்டும்.!" என்று அவனைக் கேட்டுக் கொ ண்டார். அவர் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி அவனுக்குப் பரிசாக அளித்தார். அரச உடைகளையும் மணிகள் இழைத்த உடைவாளையும் கழற்றிக் கொடுத்தார். பின்னர் மிகவும் ஒளிவீசிக் கொண்டிருந்த தமது முடிமணியையும் எடுத்து அவன் கையில் கொடுத்தார். அப்போது அவர கூறியதாவது..


                     "சந்தகா..! அரண்மனையிலே மன்னருக்குப் என் வணக்கம் கூறி, இம்மணியையும், மற்றவைகளையும் அவரிடம் எனக்காகச் செலுத்துவாயாக.. அவர் துக்கத்தை ஆற்றி, மேற்கொண்டு என் பொருட்டாக வருந்த வேண்டாம் என்று சொல்லவும். சுவர்க்க ஆசையினால் நான் இங்கு வரவில்லை. முதுமையையும் மரணத்தையும் வென்று அழிப்பதற்காகவே வந்துள்ளேன். என் பிரிவுக்காக நீயும் வருந்தலாகாது. சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் முடிவில் என்றாவது பிரியத்தான் வேண்டும். ஆதலால் விடுதலை வேட்கையோடு வந்துள்ள எனக்காக வருந்துவதை விட்டுப் புலனடக்கமில்லாது போகங்களில் ஆழ்ந்திருப்பவர்களுக்காக வருந்துவதே முறை..!"


                " என்றுமே மரணம் நம்மை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கையில், நாம் முந்திக் கொள்வதே முறையாகும். இவைகளையெல்லாம் என் தந்தையாரிடம் கூறுவதோடு, நீயும் உன் திறமையால் அவருக்கு நய உரைகள் சொல்லி, அவர் என்னை மறந்து விடும்படி செய்ய வேண்டுகிறேன். அன்புக்கு உரியவர் பிரிவதாலேயே துக்கம் வருகிறது. அன்பு அற்றவிடத்திலே துக்கமும் அற்றுப் போகும். உலகைக் காப்பதற்காகவே நான் உலகைத் துறக்கிறேன். என் இலட்சியத்தில் வெற்றி பெற்றால், என் வழியை உலகம் பின்பற்றும். உலகமே எனதாகும் என்பதையும் அரசரிடம் கூறு..!"


                                      இதுவரை அவர் சொல்லியபடியெல்லாம் சந்தகன்  செய்து வந்தான். அவர் கொடுத்த நகைகளையும் வாங்கி வைத்துக்கொண்டான். ஆனால் சித்தார்த்தர் ஒரே உறுதியுடன் முடிவாகக் கூறிய சொற்களை அவனால் தாங்க முடியவில்லை. அவன் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது. கைகளைக் கட்டிக்கொண்டு, அவன் மறுமொழி கூற முற்பட்டான். ஆனால் தொண்டை அடைத்து விட்டது. சிறிது நேரத்திற்குப்பின் அவன் மெல்லப் பேசலானான்.


               "உற்றார் அனைவருக்கும் துக்கத்தை அளிக்க தாங்கள் செய்யும் காரியத்தால், என் உள்ளம் தத்தளிக்கிறது. இரும்பு நெஞ்சு உடையவர்களையும் தங்களுடைய பிடிவாதமான  செயல் அழவைத்துவிடும். அப்படியிருக்கையில், அன்பினால் துடித்துத் கொண்டிருக்கும் இதயம் இத்துன்பத்தை எவ்வாறு தாங்தமுடியும். தாங்கள் அழைத்தவுடன் குதிரையை கொண்டு வந்தேனே அது நான் அல்ல விதி. மறுபடி எப்படி குதிரையை கொண்டு நகருக்கு போவது. சோகம் விளைவிக்கும் செய்தியோடு எப்படி போவது. தங்களின் தாயை, தந்தையை,தேவியை ஒருமுறை எண்ணி பாருங்கள், அவர்களை கைவிட துணியலாமா.. உங்கள் பாதத்தை சரணடைந்த என்னை கைவிடுவது நியாயமா..? கொடிய கானதத்தில் உங்களை தனியாக விட்டு செல்ல முடியுமா. நான் மட்டும் நகருக்கு சென்றால் அரசருக்கும் தேவிக்கும் என்ன பதில் கூறுவேன். என்மீது கருணை காட்டி உடனே வாருங்கள்..!"


                              சித்தார்த்தர் அவனுக்கு மேலும் புரிய வைப்பதற்காக பல நீதிகளை எடுத்து கூறினார். "பந்துகளிடம் பாசம் வைத்து வந்தாலும் பின்னாலில் மரணம் எங்களைப் பிரிப்பது உறுதி. இன்னும் பல பிறவிகள் எடுக்க வேண்டிய ஜீவன்களுக்கு மரணம் இயற்கை அல்லவா.! என்னை பெற்றெடுத்த தாயை எண்ணி பார். எங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது. நாம் சேந்து இருக்கிறோம் என்று எண்ணுவதே ஒரு கனவு. அப்படி இருக்கையில் யார் எமதாக முடியும். இதை உணராமல் ஒருவரை ஒருவர் நாம் ஏமாற்றி கொண்டு இருக்கிறோம். ஆதலால் நீ சோகத்தை விட்டுத் திரும்பி செல்.! பின்னாலில் ஒருமுறை வந்து பார்த்து கொள்.!"


                           "கபிலவாஸ்து மக்களிடம் என் உறுதியை கூறு, வயோதிகத்தையும் சாவையும் அழித்து கொண்டு அவர் விரைவில் வருவார். இல்லாவிட்டால் தம்மை தாமே அழிந்து விடுவார்  என்று தெரிவித்து விடு..!"


                         இந்த சொற்களை கேட்ட கண்டகம் அவர் பாதங்களை நாவினால் வருடி, கண்ணீர் துளிகள் வடித்தது. அதன் உணர்வை கவனித்த சித்தார்த்தர், "பரிகளுக்குரிய நன்றியை நீ நன்கு காட்டி விட்டாய். நீ செய்த சேவைக்கு விரைவில் பயன் பெறுவாய்..!" என்று கூறினார்.


                         பின்னர் சந்தகன் கையில் கொடுத்த உடைவாளை வாங்கி அதை தலைக்கு மேல் உயர்த்தித் தமது தலைமுடியை கையோடு சேர்த்து அறுத்தெடுத்து, அதை இடது கையால் ஆகாயத்தில் எறிந்தார். அந்த நேரத்தில் காவியுடை அணிந்த வேடன் ஒருவன் வந்தான். அவன் உடைக்கும் வில்லுக்கும் பொருத்தம் இல்லையென திகைத்தார் சித்தார்த்தர் . வேடனே அதை விளக்கினான். "காவியுடையில் தன்னை கண்ட விலங்குகள் துறவியென நினைத்து ஓடாமல் நின்றுவிடும். எனக்கு வேட்டையாட இலகுவாகி விடும்!" என்றான் வேடன்.


                                  அவ்வேடனுடைய காவியுடையிலே சித்தார்த்தர் கண்கள் பதிந்திருந்தன. "நாம் இருவரும் உடைகளை மாற்றி கொள்வோமா ..?" என்று இளவரசர் வேடனை கேட்டார். அவனும் சித்தார்த்தரின் வெண்பட்டு உடைக்கு ஆசைப்பட்டு ஏற்று கொண்டு மறைந்து விட்டான். அவன் போகும்முன் உயிர்வதை பாவம் என்று உபதேசம் செய்து அனுப்பினார். அவ்வேடனும் ஒரு தேவன் என்றே வரலாறுகள் கூறுகிறது.


                சந்தகன் அவருடைய கோலத்தை பார்த்து துக்கம் தாங்காமல் அழுது புலம்பினான். பிறகு குதிரையை அணைத்து அழைத்து கொண்டு நகரை நோக்கி திரும்பினான். வழியெங்கும் புலம்பி கொண்டே அடிக்கடி தவறி விழுந்து கொண்டே அவன் சென்றான். கண்டகமும் கண்ணீர் விட்ட படியே வள்ளல் நிற்கும் வனத்தை பார்த்து கனைத்து கொண்டே சென்றது. சித்தார்த்தர் காவியுடை உடன் சந்தகனுக்கு விடை சொல்லி விட்டு, அருகே இருந்த பார்க்கவரின் ஆச்சிரமத்தை நோக்கி நடக்கலானார்.

                                            
                                                                               (பெருந்துறவு தொடரும்.)

அன்புடன் தபோ.

mercredi 8 février 2012


                                                                      கடைசிக் காட்சி


          அப்போது பூக்கள் பூத்து நறுமணம் வீசிக்கொண்டு இருந்த வசந்த காலம். சித்தார்த்தர் மீண்டும் வனங்களை சென்று பார்க்க வேண்டுமென ஆசை கொண்டார். கொஞ்சும் கிளி, கூவும் குயில், வண்டுகளின் இசை இவை மனதுக்கு அமைதி தருமென தந்தையிடம் அனுமதி வேண்டினார். அரசரும் மகிழ்ந்து பரிவாளங்களுடன் அனுப்பி வைத்தார். குதிரையில் சித்தார்த்தர் ஏறி சென்றார்.

                  சாலையின் இருமருங்கிலும் உழவர்கள் கழனியில் உழுவதை பார்வை இட்டு கொண்டு வனத்தை அடைந்தார். வனத்தை அடைந்ததும் குதிரை விட்டு இறங்கி அங்கே தமது தோழர்களை ஒர் இடத்தில் இருத்தி விட்டுச் சிறிது தூரத்துக்கு அப்பால் சென்று, இலைகள் அடர்ந்த ஒரு நாவல் மரத்தை அடைந்தார். இயற்கையின் சாந்தி அவர் உள்ளத்திலும் நிறைய சிந்தனையை தொடர்ந்தார்.

                     மரணத்தால் விளையும் அழிவுகள் தெளிவாய் விளங்கின. "இங்கே என்னை போன்ற தன்மையுள்ளவரை நான் வெறுத்து ஒதுக்குவது அழகாகுமா, அது நியாயமா.. இவ்வுடலோடு வாழ்வது சிறை வாழ்வை ஒத்ததே.. சிறையில் அடைபட்டு துயரில் வாழ்பவன் விலங்குளை உடைத்து தப்பி செல்லவே துடிப்பான். அதேபோல் பிறவி தோறும் எல்லையற்ற துன்பம் நிறைந்த சிறையே மனிதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இந்த அறிவை விட்டு மதி மயங்கி திரியும் மக்கள் நற்கதி பெறுவது எங்கனம்..?"  என்று சிந்தித்தார். அப்போது காவி உடை அணிந்த துறவி ஒருவர் யாரும் அறியா வண்ணம் அவர் முன் தோன்றினார்.

                     சித்தார்த்தர் "யார் நீங்கள்..?"
                 
                "நான் சிராமணன். முக்தி வழிநாடி என் வீட்டை விட்டு வெளியேறியவன். எல்லா பொருட்களும் அழிவை நோக்கியே செல்கின்றன, நான் அழிவில்லா ஆனந்தத்தை நாடுகிறேன். அதுவே ஆதியும் அந்தமும் இல்லாத வாழ்வு. உணவுக்காக பிச்சை எடுத்து கொண்டு ஒரு குகையில் என் குறிகோளை அடைய ஏகாந்தமாக வாழ்கிறேன்."

                               "இன்பங்களின் வெறுமையை கண்டு கொண்டேன். வாழ்கைகூட தாங்க முடியாத துயரமாகி விட்டது, சஞ்சலமிகுந்த உலகில் சாந்தி பெறமுடியுமா..?"

                         "உயிர்கள் வேதனைகளில் உட்பட்டு இருக்கிறது என்றால் அவை இன்பத்துக்கும் ஆற்றல் உடையவையே.. ஆனால் நாம் கண்ணை திறந்து கண்டு கொள்ள வேண்டும். பாவத்தை கழுவி நீக்குவதற்கு நித்திய ஆனந்த நிருவாண நிலையை தேடுவாயாக..!"

                 "தாங்கள் இந்த நேரத்தில் கூறியது எனக்கு நற்செய்தி ஆகும். ஆனால் உலக சம்பந்தமான கடமைகளை பெருமை அளிக்கும் வகையில் நிறைவேற்ற சொல்லி என்  தந்தையார் எனக்கு அறிவுறுத்துகிறார்..!"

                   "உண்மையான ஆன்மீக வாழ்வுக்கு ஒவ்வாத காலம் எதுவுமே இல்லை என்பதை நீ உணர்ந்திருக்க வேண்டும்..!"


                     சித்தார்தரின் உள்ளத்தில் திடீரென்று உவகை மலர்ந்தது. "சத்தியத்தை நாட, பாசங்களை அறுத்து கொள்ள, ஆரணியத்தில் திரிந்து அரும் பசி தீர்க்க, விடுதலை மார்க்கத்தை அடைய இதுவே தருணம்..!" என கூறி கொண்டார். 

                       துறவி வேடம் பூண்ட தேவரும் "ஆம் உண்மையை நாடுவதற்கு இதுவே தருணம். சித்தார்த்தா.. வெளியே சென்று உன் இலட்சியத்தை நிறைவேற்று. உலகை காப்பாற்ற வந்த இரட்சகன் நீ.. இடைவிடாமல் உன் கடமையை உறுதியுடன் செய்து வந்தால் நீ தேடுவதை அடைந்தே தீருவாய்..!" என கூறிவிட்டு அவர் விரைவாக வானத்தில் பறந்து மறைந்தார். சித்தார்தரின் மனம் அமைதி கொண்டது.  தோழர்கள் தங்கியிருந்த இடத்துக்கு சென்று மீண்டும் தமது பரியின்மீது அமர்ந்து நகரை நோக்கி சென்றார்.

                      அரண்மனையை அடைந்த சித்தார்த்தர். அரசரிடம் சென்று, "மன்னா.. எனக்கு வரம் ஒன்று வேண்டும். நான் முக்தியை நாடி துறவியாக விரும்புகிறேன். உலகில் எல்லாம் முடிவில் பிரிந்தே செல்கிறது. பிரிவே எனக்கும் ஏற்பட்ட விதி. ஆதலால் நான் வனம் செல்ல அன்புடன் விடைதர வேண்டும்." என்று வேண்டினார்.

                                அம்மொழி கேட்ட மன்னர் பதறிவிட்டார். கண்ணீர் விட்டு நடுங்கியபடி "என் அருமை குமரா.., இந்த எண்ணம் வேண்டாம். துறவு வாழ்கைக்கு இது ஏற்ற பருவமன்று. ஆசைப் புலன்களை உடைய இளைஞன் தவத்திற்கேற்ற உறுதி இன்றி திரும்பி விடுவான். நாயகமே.. எனக்கு வயதாகி விட்டது. நாடாளும் பொறுப்பை உன்னிடம் தந்து விட்டு, நான் தவம் செய்ய செல்கிறேன். உன் எண்ணத்தை கைவிட்டு விடு..!"

                             இளவரசர் பதிலுரைத்தார், "அரசே.. நான்கு விஷயங்களை நிறைவேற்றி கொடுத்தால் நான் வனம் செல்ல மாட்டேன். என் வாழ்கையில் மரணம் நேரலாகாது, என் உடல் நலத்தை நோய்கள் கெடுதலாகாது, என் இளமையை முதுமை வந்து பாழாக்கக் கூடாது. என் இன்பத்தை பீடை எதுவும் குலைத்து விட கூடாது..!"

                                 வேந்தர் "வேண்டாம் கண்ணே.. நாட்டை விட்டு அகலும் எண்ணத்தை, அகற்றிவிட இயலாத செயல்களில் முனைந்து நிற்பது ஏளனமாகும்.!" என்று கூறி விட்டு மெளனமானர்.

                           "நான் கேட்டதை செய்ய இயலாது போனால், என் வழியை தடை செய்யலாகாது! உலகில் எல்லோரும் பிரிய வேண்டியவர்களே. அந்த பிரிவை யாரும் தடுக்க முடியாது. அதற்கு முன்னதாக இப்போது பெரியதோர் இலட்சியத்துக்காக நானாக பிரிவை வேண்டுகிறேன்.!" என்று உறுதியுன் நின்றார். அவருடைய உறுதியை கண்ட அரசர் மேற்கொண்டு வாதாடுவதில்  பயனில்லை என்று கருதி, "உன் பிரிவு உசிதமில்லை..!" என்று மட்டும் கூறி நிறுத்தி கொண்டார்.

                    கனிகிற துயரோடு கண்ணீர் பெருகிக் கொண்டிருந்த தந்தையரை காண சகிக்காமல், சித்தார்த்தர் தமது அரண்மனைக்கு திரும்பினார். சுத்தோனர் முக்கியமான பிரதானிகளை அழைத்துப் பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளை நீதி நூல் முறைப்படி சித்தார்தருக்கு எடுத்து உரைக்கும்படி அனுப்பி வைத்தார். வழக்கம் போல இளவரசரின் அரண்மனைக்கு வெளியேயும், நகர வாயில்களும் அதிக காவலர்களும் நியமிக்கப் பெற்றனர். மன்னரின் சகோதரர்களும் காவலை நேரிற்சென்று கண்காணித்து வந்தனர்.

                      மாலை அகன்று இரவு வானவீதியில் முழுமதி தண்ணொளி பரப்பி கொண்டு இருந்தது. அரண்மனையில் வழமைக்கு அதிகமாகவே மேனகை போன்ற பெண்களின் நடனங்கள் வீணை இசைகளும் அரங்கேறின. ஆனால் ஆடலும் பாடலும் திடீரென்று தேவர்களின் சூழ்ச்சியால் நிறுத்தப்பட்டு இருந்த இடங்களிலேயே அமர்ந்து அயர்ந்து விட்டனர்.  தோகை கொண்ட தோகையரை ஏறிட்டு பார்த்தார் சித்தார்த்தர்.

              அலங்கோலமாக துயில் கொண்ட நங்கைகளை பார்த்து, பாவம்.., பசும் பொன்னால் செய்த உயிர் பாவைகள் போன்ற பெண்கள் உறக்கம் வந்ததும் எவ்வளவு அலங்கோலமாக காட்சியளிக்கிறார்கள். இவர்களில் மயங்கும் ஆண்கள் இப்போது இவர்களின் எழிலை பார்த்தால்.. உண்மை நிலை அறிந்து கொள்வார்கள். என்று அவருக்கு தோன்றியது. 

                        மெதுவாக இசை மண்டபத்தின் அருகே இருந்த மணவறைக்கு போனார். அங்கு தேவி யசோதரை மலரணைமீது துயின்று கொண்டு இருந்தாள். அவள் பக்கத்தில் வாடிய முளரிபோல், இராகுலன் கண்ணயர்ந்துதிருந்தான். அன்னையின் மலர்க்கரம் அவன் தலைமீது கவிந்திருந்தது. கண் இமைக்காது சிறிது நேரம் மெளனமாக பார்த்து கொண்டு இருந்தார் சித்தார்த்தர். 
                                 
                                                                               (பெருந் துறவு தொடரும்..!)


               (புத்த சரிதத்தில் மனித சக்திக்கு அப்பாற்ப்பட சம்பவங்கள் அதிகமாகவே இருக்கின்றன. புத்தரை ஏற்று கொண்ட பகுத்தறிவாளர்கள் அவற்றை எவ்வாறு எடுத்து கொள்வார்களோ எனக்கு தெரியாது. அதற்காக சரித்திரத்தை மாற்றி அமைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.)

அன்புடன் தபோ.

lundi 6 février 2012

பெருந் துறவு. 2


                                                                         இரண்டு காட்சிகள் 

                                       மறுநாள் கோட்டை வாயிலில் அரசருடைய முத்திரையை காட்டியதும் காவலர்கள் நெடுங்கதவு திறந்து வழிவிட்டனர். காவலர் கூட அவர்களை அடையாளம் காண முடியவில்லை. நகர மக்களும் அவர்களை இனம் கண்டு கொள்ள முடிய வில்லை.  அதனால் அவர்களும் அமைதியாக நகர மக்களின் அன்றாடம் வேலைகளில் ஈடுபடும் வாழ்வியலை பார்க்க முடிந்தது. சித்தார்த்தருக்கு எல்லாம் புதுமையாகவே இருந்தது. அனைத்தையும் பார்த்த வண்ணம் உரோகினி நதிக்கு செல்லும் சாலைப் பக்கமாக திரும்பி சென்றனர்.


                              அந்த சாலை திரும்பியதும், தேவர்களின் சூழ்ச்சியால் நோயாளி ஒருவன் அவர்கள் முன் தோன்றினான். மெலிந்து, நலிந்து, வயிறு வீங்கியிருந்த அந்த நோயாளி தரைமீது தத்தளித்து கொண்டு இருந்தான். புற்களைப் பற்றி கொண்டு அவன் எழுந்திருக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. "அம்மா.. அப்பா.. யாரேனும் உதவமாட்டீர்களா..?"  என்று வேதனை தாங்காது மெல்ல கூவினான். சித்தாத்தர் ஒடிச் சென்று, மெதுவாக அவன் தலையை மடிமீது வைத்துக் கொண்டு, "உனக்கு என்ன செய்கிறது சகோதரா.. நீ ஏன் எழுந்திருக்க முடியவில்லை..?" என்று கேட்டார். சாந்தகனை பார்த்து "சந்தகா.. இவன் உடல் எல்லாம் நடுங்குகிறது.வாய் பேச முடியவில்லை.. கைகளும் கால்களும் காய்ந்த குச்சிகளாக இருக்கிறதே.. இவன் யார்..?" என்று கேட்டார்.

                                                 இவன் நோயாளி. ஏதோ ஒரு கொடிய நோய் பற்றி விட்டது. இவன் அங்கங்கள் எல்லாம் தளர்ந்து போய் விட்டன. இவன் சாகவேண்டியவன். ஆனால் பட வேண்டிய வேதனை எஞ்சியிருப்பதால் அந்த குறையையும் அனுபவிப்பதற்காக உயிரோடு இருக்கிறான். இளவரசே.. இவனை தாங்கள் தீண்டுதலும் ஆகாது. இவன் நோய் தங்களையும் பற்றி கொள்ளும். என்று கூறினான் சந்தகன்.

                                                                       "இந்த நோய் இவனுக்கு மட்டும் ஏற்பட்டதா..?  இல்லை எனில் எல்லோருக்கும் இது இயற்கையா..?"

                                                              "மனிதர் யாவருக்கும் நோய் பொதுவானது, அது பல உருவங்களில் தோன்றும். உடல் படைத்தவர் எல்லோரும் எந்த இடத்திலும் இதை எதிர்பார்க்க வேண்டியது தான்..!"

                          "நோய் வருவது முன்னதாக நமக்கு தெரியாதா..?"

                          "தெரியாது இளவரசே.. மறைந்திருந்து கொத்தும் நாகம் போன்றது நோய்..!"

                        "அப்படியானால் எல்லா மக்களும் நோய்களுக்கு அஞ்சித்தான் வாழ்கிறார்களா..?"

                        "ஆம் அரசே..!"

                                             "இந்த துயரை எல்லாம் பார்த்த பின்னும் இந்த மக்கள் புன்னகையோடு திரிவதை பார்த்தால் இவர்களின் அறிவு சிதறிவிட்டதாகவே தெரிகிறது. சந்தகா..! இந்த பிணிக்கு அப்பால் மனிதருக்கு என்ன நேரிடும்..?" என்று வினாவினார்.
                               
                                          "ஒரே முடிவுதான்.. மரணம்..!"

                                         "மரணமா..?"  

                               திடுக்கிட்டார் சித்தார்த்தர்.அந்த கேள்விக்கு பதில் சொல்வது போல சிறிது தூரத்தில் ஒரு சங்கின் அலறல் கேட்டது. ஒருவன் கைகளில் தீச்சட்டி ஏந்திவர அவனுக்கு பின்னால் நான்கு மனிதர்கள் ஒரு பாடையைத் தூக்கி கொண்டு வருவதையும் சித்தார்த்தர் கண்டார். சோகம் தேக்கிய முகங்களுடன் கண்ணீர் பெருகிக் கொண்டே வேறு சிலரும் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார்கள்.

"இது என்ன ஊர்வலம் சந்தகா..?"

"எவனோ ஒரு ஏழை இறந்து விட்டான். அவன் உதிரம் உறைந்து விட்டது. கண்கள் பார்வையை இழந்து விட்டது. செவிகள் ஒலிகளை ஒழிந்தது. இப்போது அந்த உடல் மரக்கட்டை போலவே.. இனி அந்த உடலுக்கு இன்பமோ, துன்பமோ இல்லை. அதற்கு நீரும் ஒன்றுதான், நெருப்பும் ஒன்றுதான்..!"

                     "சாவு என்பது இவனுக்கு மட்டுந்தானா..? இல்லை எல்லோர்க்கும் ஏற்படுவதா..?"

                     "பிறந்தவர் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே, பலசாலிகள், வாலிபர்கள், வயோதிகர்கள், யாராக இருந்தாலும் முடிவு இதுதான் ..!"

                                                    இதை கேட்டதும் சித்தார்த்தருக்கு மூச்சு விடுவதே கடினமாகி விட்டது. மேலும் அவர் மனம் துயருற்று கலங்கியது. பதறிய குரலில் சில வார்த்தைகள் வெளிவந்தன. "உலக மக்களே..!எவ்வளவு அநியாயமாக நீங்கள் ஏமாறியிருக்கிறீர்கள்.. எந்த உடலும் சாம்பலாகி விடுவதை கண்ட பின்னரும், கருத்தேயில்லாமல் வாழ்கிறீர்களே..! இதயம் என்பது கல்லா கட்டையா..? எல்லாம் மறையும் என்ற உண்மையைப் பற்றி ஏன் சிந்திப்பதே இல்லை..?" என்று கண்ணீர் விட்டு கூறிக் கொண்டே வானத்தையும் பூமியையும் மாறிமாறி பார்த்தார். அந்த பார்வையில் ஏதோ உன்னத லட்சியம் உதயமாக தோன்றியது. சோலையிலே சிறிது நோரம் தங்கி இருந்தால் அவர் உள்ளம் மாறிவிடும் என்று சாந்தகன் வற்புறுத்தி அங்கே அழைத்து சென்றான்.


                                                 சோலையில் மன்னரின் ஆணைப்படி உதாயி என்ற தோழன் இசை, நடனகுழுவுடன் சித்தார்த்தனின் வரவை காத்திருந்தான். சித்தார்த்தர் அங்கு வந்ததும் இசையும் நடமும் ஆரம்பமாயின. ஆனால் மாநிலத்தின் சோகத்தை எல்லாம் தமது முகத்தில் தேக்கி வைத்து ஒரே சிந்தனையின் ஆழ்ந்திருந்தார் சித்தார்த்தர் .

                                                       அவரின் சோகத்தை அறிந்த உதாயி அருகே வந்து பல ஆறுதல் மொழிகள், நீதிகதைகளை எல்லாம் அவர் முன் விரித்துரைத்தான். சித்தார்த்தர் பொறுமையோடு கேட்டு விட்டு நான் உலகை உதறி தள்ளவில்லை. ஆனால் நிலையாமை ஒன்றே இங்கு நிலைத்து நிக்கிறது. ஆதலால் உலகப் பொருள்களில் நான் இன்பம் காண முடியவில்லை. என்று கூறிவிட்டு அந்தி மாலையானதும் நகரை நோக்கி அனைவரும் சென்றனர்.

                                                                  நகருக்குள் நுழையும் போது தூதுவர்கள் ஓடி வந்து, இளவரசருக்கு ஆண்மகவு பிறந்திருப்பதாக நற்செய்தியை கூறினார்கள். அதை கேட்ட சித்தார்த்தர், "மகனா.. எனக்கு மேலும் ஒரு தளை இராகுலன் பிறந்திருக்கிறான்..!" என்றார்.  வேதனையில் அவர் கூறிய பெயரே பின்னால் நிலைத்து விட்டது. இரவுமுழுவதும் உறக்கம் கொள்ளாது சிந்தித்து கொண்டே இருந்தார்.

                                                                             "இந்த உலகத்தின் துயரம் கடலைவிட பெரியது, ஆழமானது. துக்கத்துக்கும் மரணத்துக்கும் பாலம் அமைவது போல் வாழ்க்கை விளங்குகிறது. மோகம் ஊட்டும் இளமை முதுமையிலும், காதல் பிரிவிலும், வாழ்கை வெறுக்கதக்க மரணத்திலும் முடிகிறது. இந்த ஏமாற்றத்தில் நானும் இவ்வளவு காலமாக இருந்து விட்டேன். இதோ மறைந்திருந்த திரை கிழிந்து வீழ்ந்து விட்டது. எனக்கும் என்னைப் போன்ற சடலம் எடுத்தவர்களுக்கும் உதவியாக நான் உண்மையை உணர்ந்து கொள்வேன். தெய்வங்களை இரங்கி பயன் இல்லை. பிரமனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்த வேண்டும்..?" இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சித்தார்தரின் கண்கள் அன்று மலர்ந்த தாமரை மலர்களாய் தூக்கம் இன்றி இருந்தன..!

                                                                              (பெருந் துறவு தொடரும்..!)

அன்புடன் தபோ.

dimanche 5 février 2012

பெருந் துறவு. 1


                                                                                   முதற் காட்சி

                                                       சித்தார்த்தருக்கு வயது இருபத்தொன்பது ஆயிற்று. இவ்வுலக மூப்பு, பிணி, சாக்காடு எதுவும் அறியாமல் மாபெரும் மாளிகையில் மங்கையரின் மையலிலும் இசை வெள்ளத்திலும் மூழ்க வைத்திருந்தார் பேரரசர் சுத்தோதனர் . நாடு, மக்கள், தொழில்கள், வனங்கள், விலங்குகள் எதையும் நேரில் பார்க்காதவாறு சிறைப்பட்டு இருந்தார் சித்தார்த்தர்.                                               
                                                     ஒருநாள் இரவில் அந்தப்புரத்தில் சித்தார்த்தர் அமர்ந்திருந்த போது தேவகீதம் ஒன்று வெளியே இருந்து பூங்காற்றாய் அவர் காதில் இவ்வாறு விழுந்தது. "காற்றை போன்றது ககன வாழ்கை .. எவ்வளவுதான் உறுதியாக பற்றியிருப்பினும்.. இந்த வாழ்வு இறுதியில் உழுத்து போகும்.. நாம் எங்கிருந்து வந்தோம்..  எதற்காக வந்தோம்.. எதற்காக செல்கிறோம்.. என்ற செய்திகளை அறியாமல் மன்பதையெல்லாம் மயக்கி நிற்கின்றது.. மாநிலத்தின் துயரை எல்லாம் மாற்ற வந்துள்ள ஞானகதிரான சித்தார்த்தர் மேற்கொண்டு காலங்கடத்தாமல் துயில் நீங்கி துள்ளியெழுந்து வரவேண்டும்..!" என்று மெல்லிய இசையாக வந்தது.                            

                                                             இதை கேட்டதும் சித்தார்த்தருக்கு நிலை கொள்ளவில்லை. இதோடு பணிப்பெண் ஒருத்தி கூறிய கதைகளால் நாடு,நகரம்,நதி,ஏரி, சோலை எல்லாம் சிறிது நேரமாவது காணவேண்டும் என்று மிகுந்த ஆவல் கொண்டார். மகனின் ஆசையை கேள்வியுற்ற சுத்தோதனர் உடனே அதற்காக நகரம் எங்கும் விழாகோலமாக அலங்கரிக்க ஏற்பாடு செய்தார். அத்தோடு வழியெங்கும் சோகமோ,துயரமோ விளைவிக்கும் காட்சி எதுவும் இருக்க கூடாது என்றும்,  கூன்,குருடர், முடவர், நோயாளர் யாரும் வீதியில் வராதவாறு தடை செய்ய ஆணையிட்டார். நான்கு வெள்ளை புரவிகள் பூட்டிய தேர் தயாராக வந்து நின்றது. சுத்தோதனரிடம் ஆசி பெற்று ரதத்தில் புறப்பட்டார் சித்தார்த்தர்.                                              
                                             
                                                              திரள்திரளாக மக்கள் வந்து இளவரசரை வாழ்த்தினார்கள். எங்கும் மலர்ந்த முகங்களாய் விளங்கின. வாழ்த்தொலிகள் முழங்கின. எங்கும் மகிழ்ச்சியே நிறைந்து இருந்தது. அது சித்தார்த்தர் முகத்திலும் நிறைந்து இருந்தது. ரதம் நகரவாயிலை அடைந்ததும் ஒரு சோலையை கண்டதும் அந்த சோலையை நோக்கி ரதத்தை செலுத்தும் படி சாரதி சந்தகனிடம் கூறினார். ரதம் சோலை நோக்கி திரும்பியது.   அந்த நேரத்தில் தேவர்களில் ஒருவன் சாலை ஒரத்தில் வயோதிக பிச்சைக்காரனாக காட்சி யளித்தான். அவனது ஒட்டிய உடலும், சுருங்கிய தோலும், நரைத்த முடியும், குழிவிழுந்த கண்களும் பார்க்க பயங்கரமாக இருந்தன. கையில் கோல் உடன் கூனிய படி இரும்மி கொண்டே பிச்சை கேட்டான். இளவரசர் வருகிறார் என்று அவனை மக்கள் மறைத்தனர். ஆனால் அதற்குள் சித்தார்த்தர் தெளிவாக கண்டு கொண்டார்.

                                          அவர் சாந்தகனை பார்த்து, "இவன் எத்தகைய மனிதன்.. இவன்  வெப்பத்தால் உலர்ந்தானா.., அல்லது பிறவியிலேயே இப்படிதான் பிறந்தானா..?" என்று கேட்டார். சாரதி திடுக்கிட்டு உண்மையை சொல்ல அஞ்சினான். ஆனால் கிழவன் உருக்கொண்ட தேவனின் ஆற்றலால் அவன் உண்மையை கூறினான்.

                                              "இவன் வயதான கிழவன். நெடுநாள் வாழ்ந்ததால் ஆற்றல் வத்திவவிட்டது. நரம்புகள் தளர்ந்து விட்டது. இவனும் குழந்தையாக இருந்து வாலிபனாகி இப்போது முதுமையை அடைந்து விட்டான்." சித்தார்த்தரின் முகம் வாட்டமடைந்தது. உள்ளம் உருகியது. மீண்டும்.. "இது இவனுக்கு மட்டுந்தானா.. அல்லது எல்லோர்க்கும் இதே கதி தானா.. எனக்கும் வருமா..யசோதரையும் நரையும் திரையும் அடைவாளா..?" என்று கேட்டார். சாரதி சொன்னான். "ஆம் இளவரசே.. பிறவி எடுத்த அணைவருக்கு உண்டு.. இளமை மறைந்து முதுமை ஏற்படுவதே இயற்கையின் விதி..!"

                                                          இதைக் கேட்டதும் சித்தார்த்தரின் சித்தமே சோகத்தில்  கலங்கிவிட்டது. பெருமுச்சு விட்டு அந்த வயோதிகனையும் மக்களையும் பார்த்தபடி கூறினார். "முதுமை எல்லோரையும் அழித்து விடுகிறது.. நமது அழகு, வீரம், நினைவு எல்லாம் தொலைத்து விடுகிறது.. இதை அறிந்த பின்னும் உலகம் கவலையின்றி காலம் கழித்து வருகிறதே.. தனக்கும் ஏற்படபோகும் கதி கண் முன் அறிந்தும் எந்த சலனமடையவில்லையே.. முதுமை பற்றிய சிந்தனைகள் உள்ளத்தில் குமுறுகையில் சோலையிலே சென்று என்ன காட்சி காணப்போகிறோம்.. ரதத்தை அரண்மனை நோக்கி திருப்பி விடு..!" என்றார். அரண்மனை நோக்கி ரதம் திரும்பியது.

                                             அரண்மனை சென்ற சித்தார்த்தர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். எவரும் எந்த பொருளும் இன்பமளிக்கவில்லை. உணவு உறக்கமின்றி இரவுமுழுதும் சிந்தனையில் ஆழ்ந்தார். இதை கண்டு சுத்தோதனர் மிகவும் வருந்தினார். 

                                                   சித்தார்த்தர் மீண்டும் நகரையும் பூஞ்சோலையும் பார்த்து வரவேண்டும் என தந்தையிடம் வந்து கேட்டார். முன்னறிவிப்பு இல்லாமல் எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் அவர் மாறுவேடத்தில் சுற்றிவரத் தீர்மானித்திருந்தார். அரசரும் வெளியே சென்றால் மகனின் கவலை குறையுமென எண்ணி சம்மதித்தார். மறுநாள் நண்பகலில் சித்தார்த்தர் ஒரு வணிகனை போலவும், சந்தகன் வணிகனின் பணியாளராக வேடமிட்டு புறப்படலாயினர்...!                           

                                                                                              (பெருந் துறவு தொடரும்..!)


(சித்தார்த்தர் ரதத்தில் புறப்பட்ட அன்றே நான்கு காட்சிகளையும் கண்டார், என்று மிகசுருக்கமாக எழுதுவதற்காக கற்பனை செய்து கொண்டு மாற்றி விட்டனர். புத்தசரித்திர விரிவான நூலில் இவ்வாறு இருப்பதை சான்றோர்கள் அறிவார்கள். அதன்படியே சுருக்கமாக வர்ணைகளை மட்டும் குறைத்து நான் எழுதுகிறேன்.)

அன்புடன் தபோ.

முதற் பரிசு.


                                                       ஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதியில் தூய வெண்மையான அன்னப் பறவைகள் வடதிசையில் இமயமால்வரையை நோக்கிப் பறந்து சென்று கொண்டு இருந்தன. மலையிலே உள்ள கூடுகளில் காத்திருக்கும் தங்களின் குஞ்சுகளிடம் அளவற்ற அன்புடன் ஏதேதோ கூறிக்கொண்டு சென்றன. சித்தார்த்தன் கண்கொள்ளாத அந்த காட்சியை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கையில் திடீரென்று ஒர் அன்னப்பறவை தன் சிறகெல்லாம் சிவப்பாகி உடலில் இருந்து உதிரம் ஒழுக.. அவன் பக்கத்தில் விழுந்தது.

                                             அவன் பதறியெழுந்து.. அதை எடுத்து உதிரத்தை துடைத்து அதன் உடலில் தைத்திருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்தான். இந்த அன்னத்தின் மீது யாரோ வெளியே இருந்து அம்பு தொடுத்திருக்க வேண்டும்.

                                                சித்தார்த்தன் வெளியே எடுத்த அம்பினை தன் கையிலே இலேசாகக் குத்திப் பார்த்தான். கையில் வலி எடுத்தது. அவ்வளவு கூர்மையான கொடிய அம்பு மென்மையான அன்னத்தின் உடலை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று எண்ணி மணம் வருந்தி அன்னத்தை மடிமீது வைத்து அதன் புண்ணுக்கு பச்சிலை வைத்து கட்டினான்.

                                                  அன்னத்தை எய்தவன் சித்தார்த்தனின் மாமன் சுப்பிரபுத்தரின் மகன் தேவதத்தன். அன்னம் சித்தார்த்தன் இருந்த நந்தவனத்தில் விழவே அவன் அதை தன்னிடம் தரவேண்டுமென்று கேட்டு ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.

                                                             சித்தார்த்தன் அன்னம் தன்னுடையதாகி விட்டது என்று  வேலைக்காரனிடம் சொல்லி அனுப்பினான். பின்னர் தேவதத்தனே நேரிற் சென்று கேட்டான். அம்பு விடுத்தலில் அன்னம் இறந்திருந்தால் அது எய்தவனின் உடமையாகலாம்.. ஆனால் அது உயிருடன் இருந்ததாலும்.. தன்னிடம் விழுந்தாலும் அதன் உயிரை காப்பாற்றிய தனக்கே சொந்தம் என்று சித்தார்த்தன் கூறினான்.


         இருவரும் ஒரு முதியவரை நாடி தங்கள் வழக்கினைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினர். அவர்..                 
                                   உயிரைக் காப்பவனே என்றும்                     
                                      உயிர்க் உடையவனாம்..,             
                                 அயர்வு வேண்டாமையா இதுவே                     
                                    அறநூல் விதிஜயா..
         
                என்று கூறி.. அன்னம் சித்தார்த்தனுக்கே என்று தீர்ப்பளித்தார். அவனியை எல்லாம் தண்ணருளால் சொந்தமாக்கி கொள்ள அவதரித்த சித்தார்த்தன்.. அந்த அருளாலே வெண்ற முதற் பரிசாக அம்புப்பட்ட அன்னத்தை எடுத்து சென்றான். அது குணமடைந்த பின் தன் இனத்தோடு இன்புற்று வாழ ஆகாயத்தில் உயர பறக்க விட்டான்.

     
அன்புடன் தபோ.