ஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனை நந்தவனத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயர வானவீதியில் தூய வெண்மையான அன்னப் பறவைகள் வடதிசையில் இமயமால்வரையை நோக்கிப் பறந்து சென்று கொண்டு இருந்தன. மலையிலே உள்ள கூடுகளில் காத்திருக்கும் தங்களின் குஞ்சுகளிடம் அளவற்ற அன்புடன் ஏதேதோ கூறிக்கொண்டு சென்றன. சித்தார்த்தன் கண்கொள்ளாத அந்த காட்சியை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கையில் திடீரென்று ஒர் அன்னப்பறவை தன் சிறகெல்லாம் சிவப்பாகி உடலில் இருந்து உதிரம் ஒழுக.. அவன் பக்கத்தில் விழுந்தது.
அவன் பதறியெழுந்து.. அதை எடுத்து உதிரத்தை துடைத்து அதன் உடலில் தைத்திருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்தான். இந்த அன்னத்தின் மீது யாரோ வெளியே இருந்து அம்பு தொடுத்திருக்க வேண்டும்.
சித்தார்த்தன் வெளியே எடுத்த அம்பினை தன் கையிலே இலேசாகக் குத்திப் பார்த்தான். கையில் வலி எடுத்தது. அவ்வளவு கூர்மையான கொடிய அம்பு மென்மையான அன்னத்தின் உடலை என்ன பாடு படுத்தியிருக்கும் என்று எண்ணி மணம் வருந்தி அன்னத்தை மடிமீது வைத்து அதன் புண்ணுக்கு பச்சிலை வைத்து கட்டினான்.
அன்னத்தை எய்தவன் சித்தார்த்தனின் மாமன் சுப்பிரபுத்தரின் மகன் தேவதத்தன். அன்னம் சித்தார்த்தன் இருந்த நந்தவனத்தில் விழவே அவன் அதை தன்னிடம் தரவேண்டுமென்று கேட்டு ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
சித்தார்த்தன் அன்னம் தன்னுடையதாகி விட்டது என்று வேலைக்காரனிடம் சொல்லி அனுப்பினான். பின்னர் தேவதத்தனே நேரிற் சென்று கேட்டான். அம்பு விடுத்தலில் அன்னம் இறந்திருந்தால் அது எய்தவனின் உடமையாகலாம்.. ஆனால் அது உயிருடன் இருந்ததாலும்.. தன்னிடம் விழுந்தாலும் அதன் உயிரை காப்பாற்றிய தனக்கே சொந்தம் என்று சித்தார்த்தன் கூறினான்.
இருவரும் ஒரு முதியவரை நாடி தங்கள் வழக்கினைத் தீர்த்து வைக்குமாறு வேண்டினர். அவர்..
உயிரைக் காப்பவனே என்றும்
உயிர்க் உடையவனாம்..,
அயர்வு வேண்டாமையா இதுவே
அறநூல் விதிஜயா..
என்று கூறி.. அன்னம் சித்தார்த்தனுக்கே என்று தீர்ப்பளித்தார். அவனியை எல்லாம் தண்ணருளால் சொந்தமாக்கி கொள்ள அவதரித்த சித்தார்த்தன்.. அந்த அருளாலே வெண்ற முதற் பரிசாக அம்புப்பட்ட அன்னத்தை எடுத்து சென்றான். அது குணமடைந்த பின் தன் இனத்தோடு இன்புற்று வாழ ஆகாயத்தில் உயர பறக்க விட்டான்.
அன்புடன் தபோ.
Aucun commentaire:
Enregistrer un commentaire